Wednesday 13 February 2013

கனவுகளும் கற்பனைகள் (சென்ற இதழ் தொடர்ச்சி)

வி.கோவிந்தசாமி 352/கே302 மெக்கானிக்கல் மெய்ன்டனன்ஸ்

      அமெரிக்க ராணுவ ஆராய்ச்சித் தலைவரான வான்னவர் புஷ் 1945ல் அட்லாண்டிக் வீக்லி என்ற பத்திரிகையில் நான் நினைத்தால் என்ற கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையில் அவர், அப்போது நம்மிடம் உள்ள கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தினால், மனிதனால் உலகம் இதுவரைப் பெற்றுள்ள அத்தனை அறிவையும் அணுகவும் கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் தகவல்களையும் கம்ப்யூட்டர்களுக்கு இடையில் சங்கிலி போல் இணைக்க முடியும் என்றார். வான்னவர் புஷ்ஷின் கனவுதான் இன்று உலகம் முழுதும் பரவி, விரவி, உள்ளங்கையில் உலகாக சுருங்கி இருக்கும் இண்டர்நெட்.

      1957 அக்டோபர் 4ம் தேதி ஸ்புட்னிக் என்ற உலகின் முதல் செயற்கைக் கோளை சோவியத் ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது.  ஆர்வக்கோளாறால் அமெரிக்கா ஒரு ராக்கெட் செலுத்த முயற்சிக்க, அது இயந்திரக் கோளாறால் தரையிலேயே வெடித்துச் சிதறியது. நிலவில் மனிதன் இறங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சோவியத் ரஷ்யா `லைகா' என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி வைக்க, `சாம்' என்ற குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது அமெரிக்கா.
      நிலவின் மீது கால் பதிக்க வேண்டும் என்பது சோவியத் ரஷ்யா, அமெரிக்க நாடுகளின் கனவாக இருந்தது. இதன் தொடக்கமாக, சோவியத் ரஷ்யா தனது லூனார் - 9 என்ற விண்கலத்தை விண்ணில் இறக்கியது. 1969-ம் ஆண்டு ஜூலை 21ல் ஈகிள் என்ற விண்வெளி வாகனத்தை அமெரிக்கா நிலாவில் இறக்கி, அதில் பயணம் செய்த ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரிங், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூவரில் ஆம்ஸ்டிராங் தனது முதல் காலடியை நிலவின் முதுகில் பதித்தார். ஒட்டுமொத்த மனிதகுலமும் நிலாவை ஜெயித்த சந்தோசத்தில் ஆனந்தக் கூத்தாடியது.
      சோவியத் ரஷ்யாவின் கனவு, நிலாவில் முதன்முதலில் விண்கலத்தை இறக்கியது என்றால் அமெரிக்காவின் கனவு நிலவில் மனிதனை இறக்கியது. ஆக கனவுதான் விண்வெளியைப் பற்றி மனித குலத்திற்கு தெரியவைத்தது என்றால் அதில் வியப்பேதுமில்லை. விஞ்ஞானப் புதினங்கள் என்ற ஹைக்கூ தொடர் யாருக்கு பொருந்துமோ தெரியாது; ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிச்சயம் பொருந்தும். ஏனென்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் எடிசன். தான் கற்ற அரைகுறை கல்வியை வைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேசனின் பேப்பர் விற்றுக் கொண்டிருந்த எடிசன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஞ்ஞானம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தார். எடிசன் காலத்தில் கார்பனைப் பயன்படுத்தி ஆர்க் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். மின்சாரத்தை எதில் செலுத்தினால் வெளிச்சம் கிடைக்கும் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்த மகாபுதிருக்கு விடை கண்டுபிடித்தவர் எடிசன். உலோகக் கம்பிகள், மூங்கில்மரப் பட்டைகள், நார்கள், தலைமுடி என்று எதை எதையோ போட்டு ஆராய்ச்சி செய்தாலும் எரிக்க வருவேனா என்றது வெளிச்சம். இறுதியில் பருத்தி நூலை சில ரசாயன மாறுதல்களுக்கு உட்படுத்தி அதன்மீது மின்சாரத்தைச் செலுத்திய போது அந்தப் பருத்தி இழை கண்ணாடிக் குமிழுக்குள் பிரகாசமாக எரிந்தது. எடிசனின் கனவு நிறைவேறியது. நமக்கெல்லாம் வெளிச்சம் கிடைத்தது. பல பொருட்களை கண்டுபிடித்தாலும் எடிசனின் மகா கண்டுபிடிப்பு மின்விளக்கே... இனி யாராவது என் வாழ்க்கையில் விளக்கேற்றியது இவர்தான் என்று உங்களிடம் சொன்னால் பளிச்சென்று சொல்லுங்கள். இல்லப்பா எடிசன்தான் என்று!
      இந்த விஷயங்கள் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னாலும் கனவுகளும், கற்பனைகளும் இருந்தே தீரும் என்பதுதான்.
      ரஷ்ய எழுத்தாளன் மார்க்சிம் கார்க்கி கற்பனை இல்லாத படைப்பினை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறான். இந்தச் சொல், இலக்கியத்திற்கும், அறிவியலுக்கும் மட்டுமல்ல மனிதன் உருவாக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தும். கற்பனைகளும், கனவுகளும் மனிதனை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும்!
      வாழ்க! வளர்க!! நம்முடைய சிந்தனா சக்தி!!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா