Thursday 22 January 2015

அக்டோபர் 2014 இதழ் மின்புத்தகமாக

வேலையில்லா பட்டதாரி

M.பழனி
99524 45378
செம்பிய மணலி



பட்டதாரி இளைஞர்கள் நாங்கள்
பரிதவிக்கிறோம் - இந்தப்
பாழ்வெளியில் வாழ்வொளியைத்
தேடி நிற்கிறோம்.

காடுவிற்றுக் கழனிவிற்று
கல்வி தேடினோம் - வெறும்
காகிதத்துப் பட்டங்களைக்
கையில் வாங்கினோம்.

வேலை கேட்டு படிவங்களைத்
தூது அனுப்பினோம் - உடன்
விண்ணப்பக் கட்டணங்கள்
திரை செலுத்தினோம்.

கப்பம் கட்டும் சிற்றரசர் நாங்கள்
கலங்கி வாழ்கிறோம் - இனி
எப்போது விடியும் என்று
ஏங்கிச் சாகிறோம்.

மனுநீதி நாட்களுக்கு
குறைவு இல்லையே - எங்கள்
மனுக்களுக்கு நீதி மட்டும்
கிடைக்கவில்லையே
வெள்ளை எழுத்து வந்த பின்பும்
நம்பிடலானோம் - தலை
வெள்ளைநரை ஆனபின்பும்
வேலையைக் காணோம்

பட்டத்துக்கு இங்கு யாரும்
மதிப்பு கொடுக்கல - அட
பழைய பேப்பர் காரன் கூட
எடைக்கு எடுக்கல
விட்டுத்தள்ளு இன்னும் என்ன
விரக்தி உனக்கு? - புது
விடியலுக்கு நம்பிக்கைதான்
பச்சை விளக்கு!

நாம ஒன்று சேர்ந்து - சமூகத்த
மாத்தணும் தம்பி - அப்போ
சுற்றுமிந்த பூமி - உந்தன்
கால்களில் தம்பி!

பாலியல் வன்கொடுமைகளைசட்டம் தடுத்துவிட்டதா?

S.பாக்கியம் 
செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக 
மாதர் சங்கம்



சமூக வளர்ச்சிப் பாதையில் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. கல்வியில், அனைத்துத் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக, சமத்துவத்துக்காக பல சட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சட்டங்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகளை, பாலியல் பலாத்காரங்களை, கௌரவக் கொலைகளை தடுத்து விட்டனவா என்றால் இல்லை என்பதே அனுபவமாக உள்ளது.

டில்லி மருத்துவ மாணவி 2012 டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியால் நாடே அதிர்ந்து போனது. தூத்துக்குடியில் 9வயது சிறுமி புனிதா; உபியில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில்; பொள்ளாச்சி விடுதியில் இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது; திருவொற்றியூரில் 6 வயது சிறுமி 54 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது என பட்டியல் நீண்டு கொண்டே போகும் நிலை இன்றுள்ளது.

வர்மா கமிஷன் பெண்களுக்குப் பாதுகாப்பாக ஏராளமாக சட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுன்றனவா என்றால் அது கேள்விக்குறியே. பெண்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தால் தங்கள் மானம் போய்விடும் என்று புகார் கொடுப்பதில்லை. அப்படியே துணிந்து சில பெண்கள் புகார் செய்தாலும் அது வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை.

குழந்தை வன்முறை சட்டத்தில் பெண் காவலர்கள் குழந்தைகளைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது என்றும், சீருடை அணியாமல் பொதுவான இடத்திற்கு அழைத்து நட்பாக விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எந்தக் காவல் அதிகாரிகளும் இதைப் பின்பற்றுவதில்லை. அதிகாரிகள் மட்டுமல்ல, ஆட்சியில் இருப்பவர்களும் பாலியல் பலாத்காரத்திற்குக் காரணம் பெண்கள் அணியும் ஆடை அணிகளே என்கின்றனர். 6 வயது குழந்தையும், 60 வயது பாட்டியும் ஆபாச ஆடை அணிந்தா பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்டார்கள்?

நுகர்வோர் கலாச்சாரத்தில் பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கும் நிலை மாற வேண்டும். சட்டங்களைப் போடுவதாலோ, தண்டனைகள் கொடுப்பதாலோ பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, பலாத்கார வன்புணர்ச்சி நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட முடியாது. ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண் சமத்துவம் என்பது மேடைப் பேச்சாக மட்டும் இருப்பதில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பெண்ணும் உயிருள்ள, உணர்வுள்ள ஒரு மனுஷிதான் என்கிற கருத்தியல் மாற்றத்தைச் சமுதாயத்தில் உருவாக்க வேண்டும். இதைப் பெண்கள் மட்டும் போராடி சாதிக்க முடியாது. முற்போக்கு சமத்துவ எண்ணம் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒன்றுபட்ட போராட்டத்தினால்தான் இந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு உஉக-வின் கோரிக்கைகள்

அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் பொதுப்பேரவை 26.9.14 அன்று நடைபெற்றது. அப்பேரவையில், உழைப்போர் உரிமைக்கழகம் எழுப்பிய கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம்.

1. அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டத்தை வேலை நாளில் வைத்து, அனைத்து உறுப்பினர்களும் பங்குபெற முடியாத நிலையை, இனி வருங்காலங்களில் களைய வேண்டும்.

2. இனிப்புகள் வழங்குவதற்கு, ஓசூரில் வழங்குவதுபோல் கம்பெனியிலேயே வழங்க வாய்ப்பு இருந்தும் மறுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கம்பெனிக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. புதிய வெல்ஃபேர் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

4. மல்டி ஸ்டேட் சொசைட்டி (ஙன்ப்ற்ண் நற்ஹற்ங் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) அந்தஸ்தைப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.

5. அடமானக் கடன் மற்றும் வீட்டுக் கடன் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.

6. நகைக்கடன் ரூ.8,00,000\-லிருந்து ரூ.10,00,000\-மாக மாற்ற வேண்டும்.

7. நமது கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் வாங்க வேண்டும். இதனால் வாடகை மிச்சமாகும்.

8. சொசைட்டியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2003க்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

9. சொசைட்டி பணியாளர்கள் நியமனத்தில் அவுட்சோர்ஸ் தவிர்த்து நிரந்தரப் பணியாளர்கள் புதிதாக நியமிக்க வேண்டும்.

10. ஓசூரில், ஓசூர் - 1ல் இருந்து ஓசூர் - 2க்கு மாற்றப்பட்ட இயக்குனருக்கு தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவு இடைத்தேர்தலில், தேர்தல் நடைபெறுமா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

11. ஒரு உறுப்பினர் இறக்கும் தருவாயில் அவருடைய ஜாமீன்தாரர்களுக்கு  நிர்வாக ரீதியாக ஏற்படும் சிக்கல்களை நீக்க வேண்டும்.

12. சங்கத்தின் திருத்தப்பட்ட பைலாவை (ஆஹ் கஹஜ்) அனைவருக்கும் வழங்க வேண்டும்.

13. வரவு-செலவுகளின் ஐயங்களை போக்க, வரவு-செலவுக்கான வெள்ளை அறிக்கையை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டப்பேரவையின் இறுதியில் சங்கத்தின் பைலா இரண்டு மாதங்களுக்குள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக இயக்குனர் பதிலளித்துள்ளார்.

ஆரோக்கியத்திற்கான பழமொழிகள் பத்து

ஸ்டாலின் ராஜா
இணைச்செயலாளர்
யூனிட் I, ஓசூர்
அசோக் லேலண்ட்
தொழிற்சங்கம்



1. நொறுங்க சாப்பிட்டா நூறு வயசு!

2. அள்ளி அமுக்குனா அற்ப வயசு!

3. குறைச்சு சாப்பிட்டா கூட வயசு!

4. வயிறு முட்ட சாப்பிட்டா வயித்தாலதான் போகும்!

5. பசித்துப் புசி!

6. நொறுக்குத் தீனி ஆயுள் குறுக்கி!

7. வாயைக் கட்டி நோயைக் கட்டு!

8. பசியறியா வயிறு பாழ்!

9. ருசி வயிற்றுக்கு சதி!

10. வாயில் செரிக்காதது வயிற்றில் செரிக்காது!

வாழ்க்கை..

P.Kமாதவன்
யூனிட் II, ஓசூர்
அசோக் லேலண்ட்



கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள்
இருந்தாலும்...

ஒரு சில நிஜங்களுடன்
நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்கு
பெயர்தான் வாழ்க்கை!



நடத்தை...

நீ வெளிச்சத்தில் நடந்தால்
உலகமே உன்னைப் பின் தொடரும்!
ஆனால் நீ இருட்டில் நடந்தால்
உன் நிழல்கூட உன்னைப் பின்தொடராது!

என்ன செய்வார்கள்? இனி...

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்



அசிங்கமாக இருப்பதாகச் சொல்லி
ஆற்றங்கரையில் இருந்து
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை...

அழகூட்டுவதாகச் சொல்லி
அங்கேயே
கட்டிக் கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை!

கடலுக்குள் போய்விடும்
கவலை வேண்டாமென
கழிவுகளைக் கொட்டினார்கள்...
குளிர்பான ஆலைக்கு வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்!

அப்போதெல்லாம் ஆற்றுமணலில்
அழுதுபுரண்டபடி
மாரியாத்தா கேட்பாள் என்று
மண்ணை வாரித் தூற்றுவாள் அம்மா!

இன்று...!

அவள் வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக் கொண்டு போகிறார்கள்
லாரிகளில்...!
என்ன செய்வார்கள்... இனி...
அம்மாவும்...
மாரியாத்தாவும்...?

இன்னிக்கு நைட் வெயில் காயுமா?

S.கெஜராஜ் 
375/K700
Mechatronics


பிள்ளைகளை வெளியூரில் கட்டிக் கொடுத்துவிட்ட திருநாவுக்கரசு பணியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். அவ்வப்போது தனது அன்பு மனைவி மீனாட்சிக்கு உடல்நலமில்லாமல் போனாலும், மனைவியுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது!

ஒரு நாள் திருநாவுக்கரசுவின் இளம் வயது நண்பன் சண்முகம் வீடுதேடி வந்து தன் மகள் திருமணத்திற்காக அவசியம் குடும்பத்துடன் வந்துவிட வேண்டுமென்று பத்திரிகை கொடுத்துவிட்டுச் சென்றான். ``ஒரே ஊர்க்காரன் என்பதாலும், இளவயதிலிருந்தே பழக்கம் என்பதாலும் இந்தக் கல்யாணத்திற்கு நாம போயே ஆகணும், உனக்கு உடம்பு சரியில்லாததால நீ வீட்டுல இரு. நான் மட்டுமாவது போயிட்டு வந்துடுறேன். நான் கூட போகலன்னா நல்லா இருக்காது. தேவைப்பட்டா உன் தங்கச்சி சாந்தா வீட்டுக்கு போறதா இருந்தாலும் போய்க்கோ. இல்லன்னா அவளை இங்க கூப்டுக்கோ'' என்று கூறி அன்று இரவு ரயிலுக்குப் புறப்பட்டுவிட்டார் திருநாவுக்கரசு.

பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்துடன் கணவனை வழியனுப்பி வைத்தாள் மீனாட்சி.

``இன்னா மச்சான் இன்னிக்கி நைட் வெயில் காயுமா?'' புலி என்கிற புலித்தேவனைப் பார்த்து துரைசிங்கம் கேட்டான். ``மாமு, விஷயமே தெரியாதா? இனிமே நமக்கு எல்லா நைட்டும் வெயில் காயும்'' என்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். ``இன்னா சொல்றே? கொஞ்சம் புரியும்படியா சொல்லு'' என்றான் துரை. ``மாமு... எந்தெந்த ஏரியாவுல  வயசானவங்க தனியா இருக்காங்கன்னு தினசரியிலேயே  போட்டிருக்கான். இது எப்படி இருக்குதுன்னா நம்பள மாதிரி ஆளுங்களுக்காகவே லிஸ்ட் போட்டு கொடுத்தாப்புல இல்ல? இது போதாதா மாமு நம்ம வருமானத்திற்கு.'' ``டேய் மச்சான் புலி, நீ உண்மையிலேயே நல்ல விஷயத்தை சொன்ன. நம்ம பொழப்புக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இனிமே நம்ம காட்டுல மழைதான் போ'' என்றான் சந்தோஷம் பொங்க துரைசிங்கம்.

இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த மீனாட்சியும், அவளது தங்கை சாந்தாவும் அயர்ந்து தூங்கினார்கள். திடீரென சலசலப்பு சத்தம் கேட்டு விழித்த சாந்தாவின் முகத்துக்கு நேரே கத்தியைக் காட்டியபடி ``சத்தம் போட்டா சொருகிடுவேன்'' என்று கூறி அருகிலிருந்த நாற்காலியில் உட்கார வைத்து கயிற்றால் கட்டினான் புலி. திடுக்கிட்டு விழித்த மீனாட்சி தங்கை கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு ``டேய் யார்ரா நீங்க?'' என்று கூச்சலிட்டார்! துரை உடனே அவளைக் கத்தியால் குத்தப் போனான். அருகில் நெருங்கி வந்த புலி கூர்ந்து பார்த்தான். ``மாமு இவங்க எங்க அம்மாடா... அவங்கள ஒன்னும் செஞ்சிடாதேடா. விட்டுடு'' என்று கெஞ்சினான். நகையும், பணமும் ஒன்றே குறிக்கோளாக இருந்த துரை காதில் அவன் குரல் விழவே இல்லை. ஓங்கிக் குத்தும்போது இடைமறித்து குறுக்கே பாய்ந்த புலியின் வயிற்றில் சொருகியது துரையின் கத்தி. ``அம்மா'' என்று அலறியபடி கீழே சாய்ந்தான் புலி.

செய்வதறியாது திகைத்தனர் மீனாட்சியும், சாந்தாவும். இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர் துரைசிங்கம் பிடிப்பட்டான். ``அம்மா நான்தான் உன் பிள்ளை மணி. ஊர் திருவிழாவில் தொலைந்து போன பின் சேராதவர்களுடன் சேர்ந்து இன்று கொலை, கொள்ளைனு பாவம் செய்ற பாவி ஆயிட்டேன்'' என்று கூறியவாறே தன் பர்சிலிருந்த தாய், தந்தை போட்டோவை காண்பித்தவாறே உயிர் பிரிந்தது புலிக்கு.

பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனைப் பிணமாக மீனாட்சி தன் மடியில் கிடத்தி, அழுத நிலை சுற்றியிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. கூடா நட்பு கேடாய் முடியும்!

எலுமிச்சை

B.டில்லி 
சித்த வைத்தியர்
99401 66297



குற்றமற்ற எலுமிச்சங்காய் வாதம், பித்தம், கபம், பித்த உஷ்ணம் போன்ற நோய்களைத் தீர்க்கும். உடல் உஷ்ணத்தையும் தாகத்தையும் தணிக்கும். வயிற்றில் வெப்பத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும். எலுமிச்சம் பழத்தைவிட காய்களை உப்பில் ஊற வைத்து ஊறுகாய்களாக பயன்படுத்துவதே சிறந்தது. இந்த ஊறுகாயைச் சிறிது அன்னத்துடன் சுவைத்து சாப்பிட சீரண சக்தியைக் கொடுத்து வாந்தியை நிறுத்தும்.

எலுமிச்சையின் சாறு 40 மி.லி. அளவுடன் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட, உடல் களைப்பு, தாகம், உடல் உஷ்ணம் நீங்கும். அம்மை நோயினால் வரும் சுரம், கொப்புளங்கள் மற்றும் அம்மை நோயின் பாதிப்பு குறையும். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து குடித்து வர சுரக்கட்டிகள் குணமாகும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எலுமிச்சையை விஷ முறிவு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். துணி மற்றும் சில பொருட்களின் மீது படிந்த சில குறிப்பிட்ட கறைகளை எலுமிச்சை சாறு கொண்டு போக்கலாம். தலைமுடியை மென்மையாக வைக்க எலுமிச்சை பழச்சாறு பயன்படுகிறது. முகம் மற்றும் உடலில் உள்ள அழுக்கு, வேர்வை இவைகளை நீக்கப் பயன்படுகிறது.

உடல் உஷ்ணம் அதிகமுள்ளவர்கள் குழம்பில் புளிக்கு பதிலாக எலுமிச்சை சாற்றினை உபயோகித்து குணமடைகின்றனர். சில சித்த மருந்துகள் எலுமிச்சை சாறு கொண்டு சுத்தி செய்யப்படுகின்றன.

என்ன.. தொழிலாளர்களே... இரண்டு இதழ்களில் எலுமிச்சையின் பயனைக் கூறிவிட்டேன். இதைப் பயன்படுத்துவது உங்கள் கையில்!






படிப்பு பெருங்காய டப்பாவா? அட்சயப் பாத்திரமா?

அனந்த நாராயணன்
 275\L192
99402 22619



படித்த படிப்பு, வேலையில் எவ்வளவு தூரம் கை கொடுக்கும்? இந்தக் கேள்வியே சிலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ``நாங்க படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே கிடையாது'' என்று சொல்பவர்கள்தான் எல்லா காலங்களிலும் அதிகம். உங்களோடு வேலை செய்பவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதிகளை ஆராயுங்கள். உங்களோடு டிகிரி முடித்தவர்கள் என்னவெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று ஆராயுங்கள். உண்மை புரியும். இன்று படித்து முடித்து அதே துறை சார்ந்த வேலைக்குப் போகிறவர்கள் மருத்துவர்கள் மட்டுமே (சிலர் மட்டுமே விதிவிலக்கு). இன்ஜினியரிங் என்பது 16வது வகுப்பு போல ஆகிவிட்டது. இன்று இன்ஜினியர்களை எல்லா தொழில்களிலும் பார்க்கலாம்.

படித்த படிப்பை நீங்கள் வேலையில் காட்ட முடிந்தால் பாக்கியவான். அப்போது கூட வேலையின் தேவை அறிந்து, நாம் கல்வி கற்கவில்லை என்பது வேலை செய்யும்போதுதான் தெரியும். பட்டங்களை பெரும் பெருமையாகக் கொண்டாடும் நம் சமூகத்தில் கல்வியின் தரம் பற்றிய நேர்மையான விமர்சனம், படித்த படிப்பின் சாதக பாதகங்கள் பற்றிப் பேசுவதில் சிரமங்கள் உள்ளன. நன்கு படித்தால் நல்ல வேலை; அதிகம் படித்தால் அதிகச் சம்பளம்; நல்ல மதிப்பெண்கள் நல்ல அறிவின் அறிகுறி போன்ற பிழையான கருத்துகள் கல்விச் சாலைகளில் வளர்த்து விடப்படுகின்றன. நிதர்சனம் வேலையில் சேரும் காலத்தில் தான் தெரிகிறது.

சிலர் நிறைய டிகிரிகள் படித்துக் கொண்டே இருப்பார்கள். அஞ்சல் வழியில் எனக்குத் தெரிந்த ஒருவர் நான்கு எம்.ஏ. பட்டம் வாங்கியிருக்கிறார். அத்தனையையும் பெயருக்குப் பின் சேர்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் ஒரு பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று அங்கலாய்ப்பார் அவரது மனைவி. கல்வி சம்பாத்தியத்திற்கு மட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை; என்றாலும் அவரின் பட்டங்கள் அறிவின் தேடலா என்று விவாதிக்க வேண்டியுள்ளது.

நிறைய படிப்பது எங்காவது பயன்படும் என்று பரவலாக நம்புகிறார்கள். நிறைய பாடங்களை மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிட பாட அறிவும், செய்திறனும் முக்கியம். எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புதிய விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல.

நீங்கள் செய்யும் வேலைதான் அறிவையும், திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது. முன்பெல்லாம் ஒரு முறை படித்துவிட்டு ஒருமுறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுவதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில்  அனைத்தும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா? அல்லது அட்சயப் பாத்திரமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!