Wednesday 13 February 2013

பொடுதலை



அனந்த நாராயணன்  275\L192
      ஒரு அரசனுக்கு ஒரு நாள் திடீரென மூட்டுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலியால் துடித்தான். உடனே அரண்மனை வைத்தியருக்குத் தகவல் சென்றது. வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இதற்கு ``பொடுதலை''யை அறுத்து வந்து கசக்கிக் கட்டினால் சரியாகப் போய்விடும். நான் சென்று பொடுதலையை அரிந்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வழியில் உறவின் ஒருவர் இறந்துவிட்டதால் அரசருக்குத் தகவல் அனுப்பிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

      அரசனுக்கு இரண்டாம் நாள் வேதனை! உடனே பணியாளனை அழைத்து பொடுதலை அரிந்து கொண்டு வா என்றார். பணியாளனுக்கு பொடுதலை என்றால் என்ன என்று புரியவில்லை. அங்கிருந்தவர்களும் விழித்தனர். உடனே அரசன் தமிழ்ப் பண்டிதனை அழைத்து வா என்று ஆணையிட, உடனே தமிழ்ப்பண்டிதன் அழைத்து வரப்பட்டான்.
      அவனிடம் பொடுதலைக்கு பொருள் என்ன என்று மன்னன் வினவ, அதற்கு தமிழ்ப் பண்டிதன், ``மன்னா, அகராதியில் பொடுதலை என்றால் முழுச் சொட்டைத் தலை என்று போட்டுள்ளது. அதைத்தான் வைத்தியர் அறுத்து வந்து கசக்கிக் கட்டினால் சரியாகப் போய்விடும்.'' என்று கூறினான். உடனே மன்னன், முழு சொட்டைத் தலையுடன் ஒருவனைப் பிடித்துவர உத்தரவிட பணியாளர்களும் அலைந்து திரிந்து ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டனர்.
      அரசன், அவன் தலையை அரிந்து கசக்கிக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட, அவன் கலங்கிப் போய் கதறத் தொடங்கிவிட்டான். அப்போது வைத்தியர் உள்ளே நுழைந்தார். நடந்ததை முழுவதும் அறிந்தார். வைத்தியருக்கு அதிர்ச்சி. மன்னனிடம், ``அரசே, பொடுதலை என்பது ஒருவகை பச்சிலை. இதை அரிந்து வந்து கசக்கிக் கட்டுவதாகத் தான் நான் சொன்னேன். இதுதான் மூட்டுவலிக்கு மருந்து, சொட்டைத் தலை அல்ல!'' என்றார். அரசன் தன் தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட அந்த மனிதனுக்கு ஆறுதல் சொல்லி பொற்காசுகள் கொடுத்து அனுப்பினான்.
நீதி: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா