தலையங்கம்
இந்தியா விற்கப்படுகிறது
மக்களுக்கு இருக்கும் முக்கியமான ஜனநாயக உரிமை
ஓட்டுப் போடுவது. ஓட்டுப் பெற்று பதவிக்கு வருபவர்கள், ஓட்டுப் போட்ட மக்களை (இந்தியாவை)
வெளிநாட்டிற்கு விற்கும் பணியைச் செய்வது மிகப்பெரிய தேசத்துரோகம்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு
(FDI) 51% சதவீதமும், டீசல் விலை உயர்வு, மானிய விலை சிலிண்டர் வெட்டு என மக்கள் விரோத
போக்குகளையே மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மன்மோகன் - சோனியா அரசு தொடர்ந்து
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களின் உணர்வுகளையும்,
வறுமையையும், கொச்சைப் படுத்தி, கேலி-கிண்டல் செய்து தங்களின் முதலாளித்துவ பாசத்தை
வெளிப்படுத்துகின்றனர்.
டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, மானிய வெட்டு ஆகியவற்றால் மக்களும், தொழிலாளர்களும்
கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, இடதுசாரிகளும்,
மற்றும் ஜனநாயக சக்திகளும் இணைந்து செப்டம்பர் 20 அன்று நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பெரும் திரளான தொழிலாளர்களும் மக்களும் ஈடுபட்டு தங்களது கோபத்தையும்
எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்கள்.
காங்கிரசிற்கு முன் ஆட்சிப் பொறுப்பை வகித்த
பி.ஜே.பி. தான் பெட்ரோல் விலையை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள்
விலையை உயர்த்த வழிவகுத்தது. காங்கிரஸ், பி.ஜே.பி. மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும்,
ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வைக் காவு கொடுக்கும் வேலையையே செய்கிறார்கள்.
ஆகவே, மக்கள் தங்கள் தமக்கு ஆதரவான சக்தியை இனம்
கண்டு ஆட்சியில் அமர்த்த முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா