Wednesday 1 August 2012

இசையால் வளமாகும் ஆளுமைத்திறன் - பாகம் 9



பேட்டியளிப்பவர் : ஜோ.சுரேந்திரன் LTCL, Dean - Pioneer Music Academy, Mobile: 98401 36288

உரிமைக்குரல்: இசையில் `ஸ்ருதி' என்பது எதைக் குறிக்கிறது? குரல் வளம் பெற என்ன செய்ய வேண்டும்?

JS: தொலைக்காட்சிகளில் இசை சார்ந்த போட்டிகளில் அழகியலுக்கும், உடை சார்ந்த விஷயங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் _ குரல் வளத்திற்கும், உடல் மொழிக்கும் கொடுப்பதில்லை.

      நம் உணவு பழக்கமே, நம் குரலைச் சீராக வைப்பதற்கும், நம் ஆளுமையைப் பேணுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு என்று நம் முன்னோர்கள் உடலையும், மனதையும் மிகத் தூய்மையாக வைத்திருந்தனர்.

      ஆனால் இன்று நச்சுப் புகையும், சுகாதாரமற்ற பாட்டில் குடிநீர், முற்றிலும் தரமில்லாத, சக்கையான மேல்நாட்டு உணவுமுறைகள் நம் சங்கீதத்தின் குரல்வளையை நெறித்துவிட்டன.

      பெண்ணிற்கு உரிய இனிமையான, மேல் ஸ்தாயி குரல்வளம், நாகரிக பழக்க வழக்கங்களால் ஆண்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. இந்நிலையை கொஞ்சம் முயற்சித்தால் மாற்ற இயலும்.

      இசைக்கு அடிப்படையே ஸ்ருதிதான். பயிற்சியோ அனுபவமோ இல்லாத மருத்துவரிடம் நம் உடலைப் பரிசோதிக்க அனுமதிப்போமா? அதுபோல் ஸ்ருதி சுத்தம் _ இசையின் ஜீவ நாடி.

      இயற்கை ஸ்ருதியை 12 நிலைகளாகப் பிரித்திருக்கிறது. (12 ராசிகள் போல) ஸ்ருதி பேதங்களை முழுமையாக உணர_ நாம் இசை கற்க வேண்டியது மிக அவசியம் (இதனை விளக்க ஒரு உரிமைக்குரல் போதாது).

      ஸ்ருதியைப் பாதுகாக்க மிதமான சூட்டில் வெந்நீர் அடிக்கடி அருந்தலாம். இரவு நேரத்தில் சூடான பாலுடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து அருந்துவது மிக நல்லது. குரல் வளத்தைப் பாதுகாக்க மதுவையும், புகையையும் பகையாகக் கருத வேண்டும். மிதமான கார உணவே நம் குரல் வளத்தைச் சீராக்க வைத்திருக்க உதவும்.

      அடிப்படை பாடங்களைச் சுருதி பிசகாமலும், லயம் விலகாமலும் பயிற்சி செய்வது அவசியம்.              (தொடரும்...)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா