Wednesday 1 August 2012

இனிக்கும் பொய்களும் கசக்கும் உண்மைகளும்



K.N.சஜீவ்குமார்
217/37918

      நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது என்று ஒப்புக் கொண்டார். இதிலிருந்து மீண்டு எழுவதற்கு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்ற சீர்திருத்தங்களை மிக விரைவாக அமுல்படுத்த வேண்டும் என்று பல பொருளாதாரப் புலிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் பொய்கள் வருமாறு.

1. 3 வருடத்தில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். என்பது சுத்தப் பொய்: சராசரியாக ஒரு வால்மார்ட் கடையில் 214 பேர் வேலை செய்கின்றனர். 40 லட்சம் பேருக்கு வேலை வழங்க 18,600 சூப்பர் மார்கெட்டுகள் திறக்க வேண்டும். இது சாத்தியமே இல்லை. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 4 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். நமது எஈடல் 10_11% சில்லரை வர்த்தகத்தின் மூலம் வருகிறது. எனவே, ஒவ்வொரு வால்மார்ட் கடையும் 1,300 இந்தியக் கடைகளை மூட வைத்து, 3900 ஊழியர்களை வேலையின்றி செய்துவிடும் அபாயம் உள்ளது.

2. அரசு நிபந்தனை சில்லரை வர்த்தகத்தைக் காக்கும்: இதுவும் பொய். பன்னாட்டு நிறுவனங்கள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ள 53 நகரங்களில் மட்டுமே கடை விரிக்கும் என்று அரசு சொல்கிறது. ஆனால் இந்தப் பெரு நகரங்களில்தான் சுமார் 2 கோடி பேர் சில்லரை வர்த்தகம் செய்கின்றனர்.

3. அந்நிய முதலீட்டால் பணவீக்கம் குறையும். இதுவும் ஒரு கற்பனையே. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால், ஒரு கட்டத்தில் போட்டி குறைந்து ஏகபோகம் உருவாகும். இது பணவீக்கத்தை அதிகரிக்கும். அதுபோல, பன்னாட்டு நிறுவனங்கள் ஊக வணிகத்திலும் ஈடுபடுவதால் பணவீக்கம் தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.

4. விவசாயிகள் பயனடைவர். இதுவும் ஒரு மாயை. இடைத் தரகர்கள் ஒழிந்து நேரடியாகப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் பல வியாபாரிகள் வேளாண்பொருட்களை வாங்கப் போட்டிப் போடும் நிலை மாறி ஏகபோக நிறுவனங்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விவசாயி விலைபொருட்களைக் கொடுக்க நேரிடும். இதனால் ஏற்கனவே, உள்ள விவசாயிகளின் தற்கொலை இன்னும் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

      எனவே, இத்தனை நாசத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அந்நிய முதலீட்டைத் தடுக்க சில்லரை வர்த்தகர்களோடு தோள் கொடுத்து மக்கள் விரோத அரசின் போக்கைக் கண்டிப்பது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா