Thursday, 26 December 2013

மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - 3

R.பத்மநாபன்
760/L054
தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

      மனிதப் பண்புகள் சந்தையின் நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் அனைவரும் சமமாகவும், ஒற்றுமையுடனும் வாழும் சூழலில் இருந்த சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும் நிலைகுலைய ஆரம்பித்தன

      சந்தையின் வீச்சு இலாபத்தின் எல்லைகளை மீறத்தொடங்கின. இலாபம் எல்லைகளை மீறியதனால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக நீதியாக இருந்த உழைப்பு, கூலி, உற்பத்தி இவைகளுக்கான அளவுகள் வரையறை அற்றுப்போயின. இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வும் கணக்கிட முடியாத அளவில் வித்தியாசமும் ஏற்பட்டன. மனிதன், மனிதம், சமூகம் இவைகளின் உறவுகளில் இருந்த நியதிகள் மறையத் தொடங்கின. சமூகம் முதலாளித்துவ சமூக அமைப்பு முறையாக மாற்றம் பெற, இலாபத்தினால் உருவான பெரும் மூலதனம்தான் காரணமாக அமைந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பில் சந்தையானது நுகர்வோர் கலாச்சார சந்தை என்ற புதிய வடிவத்தை அடைந்தது. நுகர்வோர் கலாச்சார சந்தை முறையில் உற்பத்திக்கு இருந்த கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன. தேவைக்கு மிக அதிகமாக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பொருட்களை விற்க கவர்ச்சி விளம்பரங்களின் தேவை அதிகமாயிற்று.
      பொருட்களின் விலை விளம்பரங்களின் அதிக செலவுகளினால் அவற்றின் உண்மை மதிப்பை விட பல மடங்காக உயர்ந்தது. இதனால் சமூகத்தில் மனிதன் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. மனிதம் என்கிற பண்பாட்டில் பெரிய முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின. சமூகத்தின் வாழ்வியல் நெறிமுறைகள் அதன் கட்டுப்பாடுகளை இழக்கத் தொடங்கின.
      மனிதன் சுயநலத்தைப் பெரிதாக எண்ணத் தொடங்கினான். கூட்டுக் குடும்பம் என்கிற உறவுமுறையில் இருந்து தனிக்குடும்ப நிலைக்கு மாறத் தொடங்கினான். மனித உறவுகளில் இருந்த மனிதம் என்பது மறையத் தொடங்கியது. சுயக்கட்டுப்பாடு என்கிற நெறிமுறை மறையத் தொடங்கியது. சமூக நிலைகளில் எல்லோரும் வாழ்வதற்கான கட்டுமான நெறிமுறைகளில் இருந்து விலகி, திறமை உள்ளவர்கள் மட்டும் வாழும் சூழல் உருவாகத் தொடங்கியது. சூழ்நிலை வாழ்வியலுக்கு தகுந்தவாறு மனிதன் மாறத் தொடங்கினான்.
      எல்லோரையும் சமமாகப் பார்த்த மனிதம் பலவித பிரிவினை சூழலுக்குத் தள்ளப்பட்டு மனிதமற்று போய்க் கொண்டிக்கிறது.
      சமூகத்தை ஒருங்கிணைக்கும் கருவியாக உருவான அரசும், அதன் கருவியான அரசாங்கமும் வெளிபார்வைக்கு ஜனநாயகத் தன்மையைக் காட்டிக் கொண்டு சமூகத்தை ஒடுக்கி மாற்றுப் பொதுச் சமூக நிலைக்கு முன்னேற விடாமல் தடுத்து சந்தையையும், மூலதனத்தையும் பாதுகாத்தன. சந்தையின் ஆரம்பகாலத்தில் சமூகத்திற்கு வழங்கப்பட்ட பல நலத்திட்டங்களையும், சட்டங்களையும் நேரடியாகவே நுகர்வோர் கலாச்சாரம் என்கிற சந்தைப் பொருளாதாரம் பறிக்கத் தொடங்கி விட்டது. சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையில் உலகச் சமூகம், மனிதம், மனிதன் பற்றி இன்னும் விரிவாக அறிவோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா