Wednesday 1 August 2012

பெண்களும் இயக்கமும்



B.சதீஷ்குமார்
352/36927

      மாதர் இயக்கங்களில் பெண்களை அணிதிரட்ட பல்வேறு முயற்சிகள் நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வலுவான பெண்களின் இயக்கம் கட்டுவதன் அவசியம் என்ன? அத்தகைய இயக்கத்தில் அணி திரட்டப்பட்ட பெண்களை முற்போக்கு அரசியலில் ஈடுபடுத்துவதில் ஆண்களின் பங்கு என்ன? இத்தகைய கருத்துக்களை விவாதிப்பது பல்வேறு அமைப்புகளில் இணைந்து பணியாற்றும் பெண்களுக்கு உதவிகரமாய் இருக்கும்.

      பெண்களின் திறமையைப் பற்றி நாம் பக்கம் பக்கமாக எவ்வளவு எழுதினாலும் பேசினாலும் அது சொல்லி மாளாது. அவர்கள் திறமையானவர்கள், நம்பகமானவர்கள், சலிப்பின்றி உழைப்பவர்கள், துணிவு, அறிவுக்கூர்மை, அயராது உழைக்கும் திறன் பெற்றவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிக்கொண்டு வர பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். பெண்கள் மிகப் பெரிய விஷயங்களை சாதிக்கவும், மக்கள் பணி ஆற்றிடவும், தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள மாதர் இயக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

      சர்வதேச அளவில் நியூயார்க் நகரில் நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த பெண்கள், கூலி உயர்வுக்காகவும், வேலை நேரக் குறைப்பு, பாலியல் கொடுமைகளைக் கண்டித்து 1857_ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி வேலை நிறுத்தம் செய்தனர். அந்த வேலை நிறுத்தம் பெண்களின் சக்தியை, எழுச்சியை உலகிற்கு உணர்த்தியது. 1910_ம் ஆண்டு கிளாரா ஜெட்சின் என்ற பெண்மணி தலைமையில் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், சர்வதேச பெண்கள் தினம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மார்ச் _ 8 போராட்ட தினத்தையே பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1975_ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. அறிவித்தது.

      இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் மாதர் இயக்கங்கள் தோன்றன. இந்திய சமூகத்தில் நிலவிய சமய ரீதியான பிற்போக்கான பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சீரழிவுகள் இவற்றைப் பற்றி விமர்சன ரீதியில் பெண்கள் சிந்திக்கத் தொடங்கினர். குழந்தை திருமணம் தடை செய்ய, உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து, ஆவேசக் குரல்கள் எழுந்தன. தேவதாசி முறை ஒழிப்பு, திருமண வயதை உயர்த்துதல், பெண்களுக்கு கல்வி அளித்தல், என மாதர் அமைப்புகள் கிளர்ந்தெழுந்து உரிமைகள் பெற்றனர். பெண்ணடிமைத் தனத்தை ஒழிக்க, சமூகச் சீர்கேடுகளைக் களைய பெண்களின் சீர்திருத்த இயக்கங்கள், போராடி பெற்ற வெற்றி மாதர் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி.

      பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
      பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
      எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
      இளைப்பில்லை காணென்று கும்மியடி

      பாரதியின் வரிகள் அர்த்தம் பொதிந்த நிஜமான வரிகள். அத்தகைய சக்தி படைத்த பெண்கள் இந்திய விடுதலை இயக்கத்திலும், அதைத் தொடர்ந்து இன்று வரை பெண்கள் சாதித்த சாதனைகளையும் அடுத்த இதழில் தொடர்வோம்!

2 comments:

  1. //இந்திய சமூகத்தில் நிலவிய சமய ரீதியான பிற்போக்கான பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சீரழிவுகள் இவற்றைப் பற்றி விமர்சன ரீதியில் பெண்கள் சிந்திக்கத் தொடங்கினர்.//

    இந்தியாவில் சிந்திப்பதற்காவது இடமிருந்தது. அதற்குச் சமயமும் ஒரு காரணம். இதே வார்த்தைகளை அரபு நாடுகளுக்கோ, எபிரேய நாடுகளுக்கோ பொருத்திப்பாருங்கள்.

    //குழந்தை திருமணம் தடை செய்ய, உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து, ஆவேசக் குரல்கள் எழுந்தன. தேவதாசி முறை ஒழிப்பு, திருமண வயதை உயர்த்துதல், பெண்களுக்கு கல்வி அளித்தல், என மாதர் அமைப்புகள் கிளர்ந்தெழுந்து உரிமைகள் பெற்றனர்.//

    குழந்தைத் திருமணம் என்பது எல்லா சாதிகளிலும், அல்லது ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதுமாக இருந்தது என்பதாக நிறுவுவது அபத்தமானது. அதேதான் உடன்கட்டை ஏறுதலுக்கும். தேவதாசி முறை என்பது கோவிலில் கலைகளை வளர்ப்பதற்கான ஏற்பாடகத்தான் முற்காலத்தில் ஏற்பட்டது. ஆனால் பின்னர் மனித மனத்தின் வக்கிரங்களால் கீழ்த்தரமாகச் சென்றது. இன்று தேவதாசி முறை ஒழிந்தாலும், விபச்சாரம் ஒழியவில்லை. முன்னர் அதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். இன்று யார் விபச்சாரம் செய்கிறார் என்றே அறிய முடியாத அளவில் எங்கும் வியாபித்திருக்கிறது விபச்சாரம்.

    ReplyDelete
  2. இராமாயணம் - ஒரு ஆய்வு (Click on the below link)

    இராமாயணம் - ஒரு ஆய்வு

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா