Wednesday 1 August 2012

நடுநிலை (Neutral)

கி.சுரேஷ்
261/38313, சேசிஸ் அசெம்பிளி
    ஒரு சில அரசியல் கட்சிகளில் இருந்து, தனிநபர் வரை பல்வேறு நிலைப்பாடுகளில் முடிவுகளில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே நடுநிலை என்பது சாராம்சத்தில் பெரும்பான்மைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என்ற ஏதாவது ஒரு நிலைக்கு சார்பானதே ஆகும்.

    அறிவியல் ரீதியாக உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும், சார்பு நிலையாக உருவானவையே <மனிதன் உட்பட> ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு உட்பட அனைத்து அறிவியல் விளக்கங்களும் சார்பு நிலையே சரி என்கிறது. ஒரு பொருளை உருவாக்க இன்னொரு பொருளின் துணை தேவை என்கிறது விஞ்ஞானம். ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாள் படைக்கப்பட்டாள் என்று நாம் படித்திருக்கிறோம்.
எனவே, ஒன்று உருவாக்க இன்னொன்று தேவை என்பதை கதைகளில் மட்டும் அல்ல, அறிவியல் வரலாற்றில் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாக உள்ளது. 
ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் வர்க்க நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது என்கிறார் லெனின். ஒரு சமூகத்திற்கு அடிப்படை பொருளாதாரம். அப்பொருளாதாரம் எவ்வகையான அரசியல் சார்ந்த பொருளாதாரமாக இருக்கிறதோ அதைச் சார்ந்து அரசு, மதம் என பல்வேறு மேற்கட்டமைப்பு உருவாகிறது. அரசு என்பது நடுநிலையான ஒன்று என்று கூறுவது அடிப்படைத் தவறு. ஒவ்வொரு அரசும் ஒரு வர்க்க நலன் சார்ந்த அரசாக இருக்கிறது. பல்வேறு பத்திரிகைகள் தாங்கள் நடுநிலையான பத்திரிகை என்று பறைசாற்றினாலும். அவை அடிப்படையில் ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது.

    தேர்தல், எல்லை பிரச்சனை, வெளியுறவுக் கொள்கை என நாட்டின் அனைத்து சமூக ரீதியிலான பிரச்சனைகளுக்கும் சார்பு நிலையில் இருந்தே தீர்வு சொல்ல முடியும். அங்கு நடுநிலை என்பது இல்லை.     எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே என்கிற அடிப்படையில் ஆய்வு செய்யும் இயக்கங்களே வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அந்த இயக்கங்களே சரியான நிலைப்பாடு எடுத்து தீர்வு சொல்ல முடியும். சமூக ரீதியில் ஆன பிரச்சனையில் தனிநபர் தீர்வு என்பதும். நடுநிலை என்பதும் தீர்வாகாது. 
பல்வேறு தனிநபர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து ஒரு இயக்கமாக, கூறுவதே மக்கள் பிரச்சனைகளுக்கும், சமூகத்தில் எழும் பல்வேறு போராட்டங்களுக்கும் அடிப்படைத் தீர்வாக அமையும். எந்த பிரச்சனைக்கும் முடிவுக்கும் விஞ்ஞான ரீதியில் ஆன தீர்வுகளும், இயக்கம் சார்ந்த முடிவுகளுமாக அமைவதே சமூக வளர்ச்சியில் சமூக மாற்றம் ஏற்பட வழிவகுக்கும். அதில் தனிநபர் பாத்திரம், நடுநிலை என்ற அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களை நாம் புரிந்து புறம்தள்ள வேண்டும்.

1 comment:

  1. பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ஒன்று அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும், அல்லது ஆதரித்து வாக்களிக்க வேண்டும். வெளிநடப்பு செய்தால் அதை என்னவென்று சொல்வது. இதை இடதுசாரிகளும் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்கு என்ன நிலை என்று பெயர் வைப்பது?

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா