Sunday 27 April 2014

``மாற்றம் தந்த ஏற்றம்''

S.கெஜராஜ்
375\K700
Mechatronics

``மேடம், நல்லா இருக்கீங்களா...?'' என்ற குரலைக் கேட்டு, தன் குழந்தைகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சீதா,  குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். ``யார்... யார் நீங்க...?'' என்றாள் கேள்விக்குறியுடன்.

``மேடம் எங்களைத் தெரியலையா...?'', ``ம்ம்... எங்கேயோ பார்த்த ஞாபகம், ஆனா சட்டுனு நினைவுக்கு வரலையே`` என்றாள் சீதா விழிகள் படபடக்க. ``மேடம் போன வருடம் நடந்த அந்த சம்பவத்தை நினைச்சா எங்களுக்கே அவமானமாவும், வெட்கக்கேடாவும் இருக்கு'' என்றார்கள் சீதாவிடம் பேசியவர்கள்.


``இரு, இரு... இப்போ நினைவுக்கு வருது, நீ... நீங்க... ரங்கனும், கோபியும்தானே...?'' என்று சொல்லி, ``சரி, சரி வீட்டுக்குள்ளே வாங்க!'' என்று கனிவுடன் கேட்டுக் கொண்டு, அவர்களுக்கு அருந்த நீர் கொடுத்து ``நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க...?' என்றும் அவர்களை விசாரித்தாள் சீதா. 


``மேடம் இப்ப நாங்க இரண்டு பேரும் சுயமா தொழில் தொடங்கி ஓரளவு நியாயமா சம்பாதிக்கிறோம். கல்யாணம் புள்ள குட்டினு சந்தோஷமா இருக்கோம்'' என்று கண்களில் நீர்த்துளிகளுடன் சொன்னார்கள் ரங்கனும் கோபியும்.

``இன்னிக்கு நாங்க இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்றதுக்கு நீங்கதான் காரணம்'' என்று அவர்கள் சொன்னதும் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள் சீதா. இதோ இப்பவும் அவள் மனக்கண்முன் திரைப்படம் போல காட்சிகள் நகர்கின்றன.

அன்றைய தினம் இப்போது இருக்கும் என் வீடு புதிதாய் கட்டி குடிவந்து சில நாட்கள்தான் ஆகியிருக்கும். அந்தக் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே ஒரு சில வீடுகள்தான் இருந்தன. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் நேரம், ``அம்மா..! இந்த விலாசம் எங்கே இருக்கு?'' என்று கேட்டவாறே விலாசத்தை என்னிடம் காண்பித்தனர் அந்த பைக் ஆசாமிகள். நான் விலாசத்தைப் பார்க்கும் நேரம்... பைக்கின் பின்னால் இருந்தவன் என் நாலு பவுன் செயினை அறுத்தான். அந்த பைக் ஆசாமிகள் வேகமாகச் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் சீதா சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. வேகமாக சென்ற அந்த பைக் ஆசாமிகள் தரையில் சிதறி இருந்த சரளைக் கற்களில் சறுக்கி அங்கேயே பைக் விபத்துக்குள்ளானது. விழுந்த இருவரில் ஒருவனுக்கு காலொடிந்து பலத்த அடி. மற்றொருவனுக்கு பலத்த அடிபட்டு இரத்தம் பீரிட்டது.

சீதா சற்றும் யோசிக்காமல் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றாள். ``அம்மா, எங்களைக் காப்பாத்தும்மா'' என்று கூறியவாறு கையில் இருந்த சங்கிலியை சீதாவிடம் நீட்டினான். தலையில் இரத்தம் வழிந்த மற்றொருவன் சீதாவை கைகூப்பி வணங்கி மயக்கமானான்.

ஒருபக்கம் சங்கிலி கிடைத்த சந்தோஷத்தில் மனம் இருந்தாலும், அவர்கள் இருக்கும் ஆபத்தான நிலையைக் கண்டு அவள் மனம் பரிதவித்தது. சட்டென்று ஒரு ஆட்டோவை அழைத்து, அந்த டிரைவர் உதவியுடன் அவர்களைப் பக்கத்தில் இருந்த கிளீனிக்கில் சேர்த்தாள் சீதா. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து அன்று காப்பாற்றி அறிவுரையும் கூறினாள் சீதா. அவள் கூறிய அறிவுரையை ஏற்றதால் இதோ இன்று முற்றிலும் மாறுபட்ட இதயங்களுடன் அவள் கண்முன் நிற்கிறார்கள் கோபியும் ரங்கனும்.

இதோ இன்று திருந்தியவர்கள் இரண்டு பேர்!
இன்னும் திருந்தப் போகும் உள்ளங்களும் பலவுண்டு!
சீதா போன்ற உள்ளங்கள் இருப்பதால்...!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா