Wednesday 13 February 2013

நமது குரல்



கேண்டீனில் பூரி வழங்கும் நாளில், பூரி எண்ணெய்ப் பொருள் என்பதால், பூரியோடு + உப்புமாவையும் இணைத்து வழங்கினால் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்பது தொழிலாளர்களின் விருப்பம். சங்கம் பல வருடங்களாக இப்பிரச்சனையை நிர்வாகத்துடன் பேசி வருகிறது. தமது உழைப்பால் உயரிய நிலையில் லேலண்ட் நிறுவனத்தைக் கொண்டு வந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிர்வாகம் முன் வர வேண்டும்.

நமது தொழிலாளர்களுக்கான நியாய விலைக் கடைகள் எண்ணூர், திருவொற்றியூர், மீஞ்சூர் பகுதிகளில் உள்ளன. தென்சென்னைப் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களுக்காக ஏதேனும் ஒரு மையத்தில் ஒரு நியாய விலைக்கடையை ஏற்படுத்தினால் தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கும். இப்பிரச்சனையில் சங்கமும், நிர்வாகமும் கவனம் செலுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தென் சென்னை பகுதியில் ஒரு நியாய விலைக்கடையை ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
பிடிஐ பகுதியில் பாஸ் போடும் செக்யூரிட்டி அலுவலகம், கேட்டின் மிக அருகாமையில் உள்ளதால் தொழிலாளர்கள் அவுட் பாஸ் போடச் செல்லும் போது நிற்க வேண்டியுள்ளது. அப்போது சேசிஸ் வண்டிகள் வருவதும் போவதும் பாஸ் போட வருபவர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. மேலும் மதியத்திற்கு மேல் வெயிலின் கொடுமையையும் தாங்க வேண்டியுள்ளது. பாஸ் போட்டுக் கொடுக்கும் செக்யூரிட்டிகளுக்கும், பாஸ் போடச் செல்பவர்களுக்கும் வெயில் தாக்காத வகையில், செக்யூரிட்டி அலுவலகத்தைச் சற்றுத் தள்ளி உள்ளே நிழலில் இருக்கும்படி அமைத்தால் அனைவருக்கும் பயனளிக்கும். நிர்வாகம் இதை கவனிக்க வேண்டும்.
பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்
நாமும் பங்கேற்போம்
      இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் (ஐஎன்டியுசி, பிஎம்எஸ், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்தியத் தொழிற்சங்கங்களும்) மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கம், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க சம்மேளனங்களும் இணைந்து பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும் அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில் பாரம்பரியம் மிக்க நமது அசோக்லேலண்ட் தொழிலாளர் சங்கமும் பங்கேற்க வேண்டுகிறோம்.
கோரிக்கைகள்: தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்திட, தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்க, போனஸ், கிராஜிவிடி உச்சவரம்பை நீக்கிட, பி.எப்., பென்சன் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை எதிர்த்திட, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியர் ரூ.10,000\- வழங்கிட, அவர்களுக்கு பி.எஃப்., இஎஸ்ஐ வசதிகளை உத்தரவாதப்படுத்திட, வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தி மேலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட, பொதுத்துறைப் பங்குகளை விற்பனை செய்வதைக் கைவிட, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட எனப் பல கோரிக்கைகளை முன் வைத்து நடக்கும் இப்போராட்டம் வெல்லட்டும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா