Saturday 13 October 2012

அக்கம்பக்கம்



அசோக் லேலண்ட் கேண்டீன் தொழிலாளர் போராட்டம் வெற்றி

      எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கேன்டீன் தொழிலாளர்கள் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பொதுத் தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) இணைந்து செயல்படுகின்றனர். 15 ஆண்டுகளாகப் பணிபுரியும் இத்தொழிலாளர்கள் கடந்த 6 ஆண்டுகளாக சங்கத்தில் இணைந்துள்ளனர். இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சங்கம் ஒப்பந்ததாரருடன் பேசி பி.எப்.,, இ.எஸ்.ஐ. உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கொரு முறை ஒப்பந்த முறையில் பணி நடைபெறுகிறது. ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் 31 ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரர் பழைய தொழிலாளர்களை வெளியேற்ற எடுத்த முயற்சி சங்கத்தால் முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து வேலை அளிக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாலும், ஏழு தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டனர். பொதுத்தொழிலாளர் சங்கமும், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கமும் தலையிட்டுப் பேசியதில் நான்கு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். பாதிக்கப்பட்ட மீதம் மூன்று தொழிலாளர்களையும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கேண்டீன் தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை. காண்டிராக்ட் முடிந்தால் அதுவரை அந்தக் காண்டிராக்டில் பணிபுரிந்த தொழிலாளிகளை வேலையை விட்டு நீக்கலாம் என்ற நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்தது கேண்டீன் தொழிலாளர்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி.

பால்மர் லாரி - சிஐடியு சங்கத்தின் சாதனை...

      மணலியில் இயங்கும் பால்மர் லாரி பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் பேரல்களை உற்பத்தி செய்கிறது. இங்கு உற்பத்தியாகும் பேரல்கள் பல பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு பேரல் ஏற்றுவதற்கு ரூ.2.40 இதுவரை வழங்கப்பட்டது. தற்போது ஊதிய உயர்வின் மூலம் ரூ.4.15ஆக அதாவது ஒரு பேரலுக்கு ரூ.1.75 உயர்த்தப்பட்டுள்ளது. இது பழைய ஊதியத்தைவிட 72% கூடுதல். இனிமேல் ரூ.20,000\-வரை மாத ஊதியம் பெறுவார்கள். ஊதிய உயர்வு மட்டும் ரூ.5,000\-

      பால்மர் லாரி தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் சங்கத்தில் இணைந்து செயல்படுவதே இந்த வெற்றிக் காரணம். ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்ததாரர் திரு.ராஜன் அவர்களும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், கே.ஆர்.முத்துசாமி, அன்பு, செந்தில் பங்கேற்றனர். ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து ஒப்பந்தத்தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ACCL வாழ்க்கைக்கான போராட்டம்

30.09.12 அன்று ஏ.சி.சி.எல். தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அசோக் லேலண்ட் பிரதான நுழைவு வாயில் எதிரில் மாபெரும் தர்ணா போராட்டம் நடந்தது. காவல்துறையின் கெடுபிடியை மீறி ஆவேசமாக நடத்தப்பட்ட இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் தலைமையேற்றார்.

வேலைப் பாதுகாப்பிற்கு உத்திரவாதமும், உறுதிமொழிக்கடிதமும் கொடுத்த அசோக் லேலண்ட் நிர்வாகமே!

உடனடியாக ஏசிசிஎல் நிறுவனத்தை ஏற்று நடத்து!

ஏசிசிஎல் தொழிலாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்கு!

சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப்., எல்.ஐ.சி. வீட்டு கடனுக்கு உண்டான தவணைகளை உடனே வழங்கு!

ஏசிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை அசோக் லேலண்ட் நிறுவனமே மீண்டும் பெற்று 700 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்று!

      என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில்  அகஉம பொதுச்செயலாளர் ஆர்.சற்குணன், எண்ணூர் பவுண்டரீஸ் சங்கப் பொதுச்செயலாளர் ராஜகாந்தம், தொழிலாளர் முன்னேற்ற அணியின் நிறுவனர் வி.அய்யப்பன்பிள்ளை, ஏஐசிசிடியு ஏ.எஸ்.குமார், ஏசிசிஎல் பொதுச்செயலாளர் நந்தகுமார், சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.ஜி.காசிநாதன்  ஆகியோர் உரையாற்றினர்.

      300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஏசிசிஎல் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் - 1

      அசோக் லேலண்ட் யூனிட் - 1 ஒப்பந்த பேச்சுவார்த்தை 28.9.12 அன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சங்கம் 410 நிமிட வேலை நேரத்தை 430 நிமிடமாக ஆக உயர்த்தி ஒப்புக் கொண்டதால் நிர்வாகம் ரூ.2000\- ஊதிய உயர்வாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொழிலாளர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் சிறப்பான ஒப்பந்தம் அமைய வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா