Tuesday 11 March 2014

பசி

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை

S.கெஜராஜ் - 375/K700 - Mechatronics

      ``யோவ்...! நீயெல்லாம் ஒரு மனுஷனாயா...? கைக்குழந்தையோட இருக்கிற அந்த பொம்பள மேல ஏன்யா சுடுதண்ணிய வீசுற...?'' என்று டீக்கடைக்காரரைப் பார்த்துப் பொரிந்து தள்ளினார் பெரியவர்.
      ``ஏம்மா...? நீ இன்னா கேட்ட...?'' என்றார் பெரியவர். ``பசின்னு கேட்டேன். அதுக்கு இவ்வளவு ஆவேசமா தண்ணீ குவளையை வீசிட்டார். நல்ல வேளை மேல படல ஐயா'' என்றாள் அலமு.
      பசி என்றதும் தன்னிடமிருந்த இருபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்த பெரியவர், ``ஏம்மா? ஏதாவது வாங்கி நீயும், குழந்தையும் சாப்பிடுங்க...!'' என்றார். பசியின் கொடுமை அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே.

      மிகப் பெரிய திருமண மண்டபத்தின் வாயிலின் ஒரு ஓரத்தில் அலமு கைக்குழந்தையுடன் நின்றிருந்தாள். ``ஏம்பா...? சூப்பர் சாப்பாடு; ஸ்வீட்டே மூணு இருந்திச்சி, பதார்த்தமே ஏழு, எட்டு... வயிறு ஃபுல்லா ஒரு கட்டு கட்டிட்டேன். ஏன்னா எனக்கு இன்னைக்கு சரியான ``பசி'' என்றார் அந்த நபர். மற்றொருவர்; ``அதைவிட இன்னொன்று கவனிச்சியா? எல்லோரும் பசிக்கு சாப்பிடல; ருசிக்குத்தான் சாப்பிடறாங்க. இலை நிறைய சாப்பாடு வீணா அப்படியே மூடிக் கிடந்துச்சு. பணக்காரங்க வீட்டு கல்யாணம் எல்லாம் இப்படித்தான் இருக்கும். பணமும், உணவும் விரயம் பண்ணித்தான் டாம்பீகமா செய்வாங்க! சரி, சரி வா, நமக்கென்ன மொய் எழுதனமா, வயிறு ரொம்ப சாப்பிட்டமா, அவ்வளவுதான் என்று கூறியவாறே இருவரும் மண்டபத்தை விட்டு நகர்ந்தனர்.
      மண்டப வாயிலின் ஓரத்தில் நின்றிருந்த அலமுவை நோக்கி ஒரு இரண்டு வயதுக் குழந்தை ஓடி வந்தது. பின்னாடியே அந்தக் குழந்தையின் தாய், ``ஏய்! நில்லு, நில்லு ஓடாதே'' என்று கத்தியவாறு ஓடி வந்தாள். பசியின் தவிப்பை உணர்ந்த அலமு, ``குழந்தைக்கு நல்ல பசிம்மா, அதனால்தான் அழுகிறது'' என்று அந்தத் தாயிடம் கூறினாள்.     ``ஏய், விடு; நீ யாரு என் குழந்தையைப் பார்க்க?'' என்று அலமுவிடம் கத்தினாள் குழந்தையின் தாய். அப்போதுதான் சற்றும் எதிர்பாராத வகையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அலமுவிடம் தஞ்சம் புகுந்த அந்தக் குழந்தை அலமுவின் மார்பில் பாலைப் பருகியவாறு இருந்தது. குழந்தையின் அழுகுரலும் நின்றது!
      அந்தக் குழந்தையின் தாய் தன் தவறை உணர்ந்து, கண்களில் நீர் துளிர்க்க அலமுவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்! ``நீ யாரோ, தெய்வம் போல வந்து என் குழந்தைக்கு அமுது படைத்து எனக்குப் புத்திப் புகட்டினாய். என் இளமையின் மேல் நான் செலுத்திய கவனம், என் குழந்தையிடம் செலுத்தவில்லை'' என்று கும்பிட்டாள்.    ``அம்மா என்ன நீங்க மன்னிக்கனும்''. பசி என்பதை நன்கு உணர்ந்தவ நான். ஒரு குழந்தை அழுவது பசியாலா என்பதை என்னால் நன்றாக அறிய முடியும் தாயே!'' என்று இருகரம் கூப்பி வணங்கினாள் அலமு!

      கொடிது! கொடிது! வறுமை கொடிது!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா